(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் வாரங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்பதால் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படும் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கடந்த வருடத்தை போன்றல்லாமல் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினருடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்பதால் டெங்கு நுளம்புகள் பெருக வாய்ப்புக்கள் உள்ளன. அதற்கமைய டெங்கு நுளம்பு பெருக ஆரம்பித்தால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இதற்கான முன்னாயத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கடந்த காலங்களில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்பட்டது. கடந்த காலத்தில் மே - ஜூலை மற்றும் ஒக்டோபர் - ஜனவரி மாத்திற்கு இடைப்பட்ட காலத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
கடந்த வருடத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிக மக்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகியிருந்தனர். இவ்வருடம் அவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதைக் குறைப்பதற்காக டெங்கு ஒழிப்பிற்கான முன்னாயத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அத்தோடு தற்காலிக கட்டடங்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று இதன் போது அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன இ மேலதிக செயலாளர் சோமதுங்கஇ பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன இ தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment