பெரு நாட்டில் கொரோனா அச்சத்தால் சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் 9 பேர் பலியாகினர்.
தென்அமெரிக்க நாடான பெருவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் உள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
600-க்கும் மேற்பட்ட கைதிகள், 100-க்கும் அதிகமான சிறைக் காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், சக கைதிகள் இடையே அச்சம் நிலவுகிறது.
இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகள் தங்களை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் லீமாவில் உள்ள ஒரு சிறையில் கைதிகள் 2 பேர் நேற்றுமுன்தினம் கொரோனா தாக்கி உயிரிழந்தனர். இதனால் அச்சம் அடைந்த சக கைதிகள் தங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் இருந்த வெளியேற முயன்ற கைதிகள், சிறைக்காவலர்களை கற்கள் உள்ளிட்டவைகளால் தாக்கினர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.
நிலைமை மோசமானதை தொடர்ந்து, கலவர தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் கைதிகள் 9 பேர் பலியாகினர். மேலும் இந்த கலவரத்தில் 60-க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள், 5 போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment