கொரோனா தொற்றினை காரணம் காட்டி கோரப்பட்ட பிணை மனுக்களில் 90 வீதமானவை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

கொரோனா தொற்றினை காரணம் காட்டி கோரப்பட்ட பிணை மனுக்களில் 90 வீதமானவை நிராகரிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்கள் கொழும்பில் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

அவ்வாறான 90 வீதமான மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். 

121 பிணை மனுக்கள் இன்று மட்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகள் குறித்த பிணை கோரிக்கை மனுதாரர்களுக்கு பிணையளிக்க கடும் ஆட்சேபனை வெளியிட்டனர். 

குறிப்பாக இதுவரை சிறைச்சாலைகளில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டி, கொரோனாவை காரணம் காட்டி பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் விளக்கமறியலில் உள்ளோர் பிணை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக வாதிட்டார். 

'கொரோனா தொற்றை காரணமாக முன்வைத்து போதைப் பொருள் கடத்தல்கார்கள் மற்றும் பாரிய குற்றங்களை இழைத்தோர் விடுதலையை பெறுவதற்கு திட்டமிட்டுள்ள இவ்வாறான சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு சட்ட மா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும்' என அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில் போதைப் பொருள் குற்றம், ஏனைய பாரிய குற்றங்களில் ஈடுபட்டோரின் பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment