கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தாக தெரியவில்லை - ரணில் - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தாக தெரியவில்லை - ரணில்

(ஆர்.யசி) 

கொரோனா வைரஸ் நாடு பூராகவும் பரவும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது. எனினும் இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரியவில்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர் இங்கு மேலும் கூறியுள்ளதாவது, இந்த நெருக்கடியை கையாளுவதற்கான நிதி செயற்பாடுகளில் கூட அரசாங்கம் தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றது. 

எனினும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான நிதியை கையாளும் வகையில் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை நிறைவேற்றியுள்ளதால் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நிதி விவகாரங்களை கையாள்வதில் எந்த நெருக்கடியும் வரப்போவதில்லை. 

அதேபோல் அரசியல் அமைப்பின் 155(3) பிரகாரம் ஜனாதிபதிக்கு இந்த கால எல்லைக்குள் இடைக்கால கணக்கறிக்கைக்கு அப்பால் எந்தவொரு நிதி செலவீனங்களையும் முன்னெடுக்க முடியாது. 

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் கூடும் வரையில் எந்தவொரு நிதி செலவீனங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது. 

கட்சி தலைவர் கூட்டம் ஒன்றினை கூட்டுமாறு நாம் கூறியதும் இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டிருந்த காரணத்தினால்தான். நாம் அவ்வாறான கோரிக்கையை முன்வைத்து ஒரு வார காலம் கடந்துள்ள போதிலும் கூட இன்னமும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவித ஆரோக்கியமான பதிலும் கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடுவதை கருத்தில் கொள்ளாது நாட்டினை பாதுகாக்கும் நோக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதே முக்கியமானது என்பதை பொறுப்பானவர்களுக்கு கூறுகின்றேன் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment