(சோபிதன்)
யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுகளை வழங்கும் அரசியல் கட்சியினர் தேர்தல் விளம்பரமாக செயற்படாதீர்கள் சேவையாக மட்டும் செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ள யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அரசு மட்டுமல்லாது யாழ்ப்பணத்தில் பல அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கிராமங்கள் தோறும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உதவிகளை செய்து வருகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். எனினும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவிகள் செய்யும் நோக்குடனேயே செயற்பட வேண்டும்.
மாறாக தேர்தல் பிரச்சாரமாக அமையக் கூடாது. ஏனெனில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே அரசியல் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயற்படுங்கள். தேர்தல் நேரமாக இதனை பயன்படுத்த வேண்டாம்.
நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தை மீறி அரசியல் கட்சிகள் செயற்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment