அமெரிக்காவின் பெருமுயற்சியால் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட அமெரிக்காவும், தலிபான் அமைப்பும் ஒப்புதல் அளித்தன.
சமீபத்தில் அங்கு ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே 29-2-2020 அன்று அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.
அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பை அமெரிக்க அரசு ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நேற்று தெரிவித்தார்.
தலைநகர் காபுலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்ரப் கானி, 'கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வாக்குறுதி அமெரிக்காவால் அளிக்கப்படக் கூடியதல்ல. இது தொடர்பான எனது அரசுதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் கைதிகளை விடுதலை செய்ய நான் தயாராக இல்லை.
தலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக வேண்டுமானால் இந்த கோரிக்கை இருக்கலாம். ஆனால், இதை முன்நிபந்தனையாக எங்களிடம் வலியுறுத்தக் கூடாது’ என குறிப்பிட்டார்.
இந்நிலையில், போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மையின் ஈரம் காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தலிபான் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஜபியுல்லாஹ் முஜாஹித் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வன்முறை குறைப்பு தற்போதுடன் முடிவுக்கு வருகிறது. எங்களது நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
(அமெரிக்கா-தலிபான்) ஒப்பந்தத்தின்படி, எங்களது வீரர்கள் வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஆனால், காபுல் அரசின் நிர்வாகத்தில் உள்ள படையினர் மீது எங்களது தாக்குதல் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment