அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு செயற்பாடானது அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமையினால், பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார அச்சம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயமான தீர்வினை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், குறித்த மண் அகழ்வினால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு நஷ்டஈடு பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
கொழும்பு, அங்குலான கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு இன்று (03.03.2020) நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் நிலமைகளை அவதானித்தார்.
இதன்போது, மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் கடலின் இயல்பு குழப்பமடைந்து உற்பத்தி பாதிக்கப்படும் என்று அச்சம் வெளியிட்டனர்.
அத்துடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் தமது கடல் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பிரதேசத்தில் இன்னும் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டினர்.
சிறிய படகுகள் மூலம் சிறு தொழிலாளர்களாகிய நாங்கள் குறிப்பிட்டளவு கடல் பிரதேசத்தினை மட்டும் நம்பியே வாழ்வதால் இவ்வாறு மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தங்களுடைய வாழ்வாதாரத்தினை மோசமாக பாதிக்கும் எனவும் எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர், குறித்த மண் அகழ்வு செயற்பாடானது சூழல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாகவும் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பட்சத்தில் குறித்த பிரதேசத்தில் வாழும் கடற்றொழில்சார் குடும்பங்களின் வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக ஆராய்ந்து நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் கடல் நீர் உள்நுழைவதை தடுக்கும் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக சூழல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் அகழப்படுகின்ற குறித்த மணல் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment