முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு சாட்சியம் சொல்வதற்குச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நாம் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனத்தை வழங்குவது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைய நாட்களில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் தமிழர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்வதற்கு சென்றவர்.
அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. நாம் எவ்வாறு அவருக்கு அதை வழங்க முடியும். எனவே இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது அவருக்கு ஆசனம் வழங்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதனைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை என்று கூற முடியாது ஆனால் தவறான போலிப் பிரச்சாரங்கள் செய்ய முடியாதே தவிர அனைவருக்கும் அவர்கள் தொடர்பில் கதைக்க முடியும். எனவே அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோர் அவதானமாக தமது கருத்துக்களை வெளியிடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment