இன்று உலகம் முழுவதும் கொடிய நோய் கொரோனா வைரஸ் பரவும் இவ்வேளையில் நோய்க்கு பயந்து ஒழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, போராட்டம் மனிதர்கள் மனிதர்களுடன் போராடும் போது மறைந்து வாழ்வதை விட நோய்க்கு பயந்து தனிமைப்படுத்தல் என்பது மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த தீர்ப்பாகவே பார்க்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவுத்தார்.
தற்போதய நிலைமை தொடர்பாக மேலும் கூறுகையில் இன்று உலகம் முழுவதும் ஒரு நோய் மக்களை அச்சுறுத்தி ஆட்கொள்ளி வைரஸ் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.
உலகமயமாக்கல் நவீன விஞ்ஞான யுகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகளை மனிதர்களின் அறிவாற்றலால் கண்டுபிடித்தாலும் இந்த கொரோனா நோய்க்கு இதுவரை மனிதரால் மருந்து கண்டுபிடிக்கப்படாமை வேதனையான விடயமாகும்.
ஆயுதத்தால் மனித அழிவுகளுக்காக பல நாடுகள் பல கோடி ஆயுதங்களை கண்டுபிடித்து சாதனை படைக்கும் இன்றைய காலத்தில் ஒரு நோயை தீர்க்க மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது மனிதனை இறைவன் வழிநடத்துகிறான் என்ற உண்மை உணரப்படுகிறது.
அதாவது இறைவனால் விதிக்கப்பட்ட தீர்ப்பை மனிதனால் மாற்ற முடியாது என்பதை இந்த நோய் எமக்கு கற்றுத்தந்த பாடம் எனலாம்.
இயந்திரமயமாக்கல் காலத்தில் ஓய்வின்றி உழைக்கும் மனிதகுலத்தை உலகம் முழுவதும் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும் கட்டளையை இறைவன் மனிதனுக்கு அருளியுள்ளான் அதுதான் இந்த நோய் தாக்கத்தால் இவ் உலகில் இன்று 200 நாடுகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு எல்லா மக்களும் வீட்டில் தனிமைப்படுத்தி ஓய்வெடுக்கும் ஒரு நிலையை இறைவனால் எமக்கு ஏற்பட்டுள்ளது என எண்ணத்தோன்றுகிறது.
போட்டி பொறாமை வஞ்சகம் சூது என மனித மனங்கள் நிறைந்துள்ள இந்த காலத்தில் நாடு இனம் மதம் குலம் சாதி எல்லாம் கடந்து பதவி பட்டம் அந்தஷ்து பார்க்காமல் எல்லா மனிதர்களையும் சமமாக தாக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் என்பது உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரு கணம் சிந்திக்க வைத்துள்ளது.
இந்த நோயில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால் இறை சிந்தனையை மனதில் பதித்து வீட்டில் தனித்திருந்து சுகாதார பழக்க வழக்கங்களையும் எமது முன்னோர்கள் எமக்கு சொல்லிக் கொடுத்த பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களையும் நோய் தொற்று நீக்கும் தமிழ் கலாசார முறைகளையும் மீண்டும் பேணி வாழ வேண்டும் என்பதை இந்த கொரோனா நோய் எமக்கு சொல்லித்தந்த பாடமாகும் என மேலும் கூறினார்.
No comments:
Post a Comment