(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விழிப்புணர்வு செய்திகள் திருப்தியளிப்பதாக இல்லை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இளம் தலைமுறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவலால் இன்று பூகோள மட்டத்தில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து எடுத்த பல சிறந்த தீர்மானங்களினால் தற்போது வைரஸ் பரவல் முடிந்த அளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில் தினக்கூலி பெறும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி பயனாளர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் இரு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
அரசியல் நெருக்கடி, ஆட்சி கவிழ்ப்பு சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்கள் காட்டும் அக்கறை தற்போது கிடையாது. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment