பிரித்தானிய இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. என்றாலும் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவிலும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. சதாரண மனிதன், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என யாரையும் விட்டு வைக்காத இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது இங்கிலாந்து மகாராணி எலிசபெத் குடும்பத்தையும் பதம் பார்த்துள்ளது.
மகாராணி எலிசபெத்தின் மகன் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் (வயது 71). இவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மனைவி கமிலாவுக்கும் (72) பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பால்மோரலில் உள்ள அரண்மனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சார்லஸ் கடைசியாக பிரித்தானிய மகாராணியை மார்ச் மாதம் 12 ஆம் திகதி சந்தித்துள்ளார். என்றாலும் மகாராணி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நலன் தொடர்பாக மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 12 ஆம் திகக்கு பின் இளவரசர் சார்லஸ் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டாலும், கடந்த வாரங்களில் இளவரசர் சார்லஸ் அதிக அளவிலான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அவருக்கு எங்கிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பது கடினமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment