“நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் நலன்சார்ந்த அரசை உருவாக்க வேண்டுமேயன்றி தனிச்சிங்கள அரசை உருவாக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைப்பது காலசிறந்த நடைமுறையல்ல. இந்த நாட்டில் 30 வீதமான சிறுபான்மை மக்கள் வாழும் நிலையில் இவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்காது இவ்வாறான கோஷங்களை முன் வைப்பது அறிவுடைமையாகாது. இதனை இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் இனவாத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்”
இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.
‘தனிச்சிங்கள தலைவர் கிடைத்தது போன்று தனிச்சிங்கள அரசு வேண்டும்’ என பொதுபலசேனா முன்வைத்திருக்கும் கருத்து குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும்கூறியதாவது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட்டு சகல இனங்களும் ஒன்றிணைந்து இந்தநாட்டை சுபீட்சம்மிக்க நாடாகக் கட்டியெழுப்பவேண்டும் என்பதே மக்களது கனவாக உள்ளது. குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் இதனையே பெரிதும் விரும்புகின்றனர்.
சம உரிமையுடன் தாமும் இந்நாட்டில் கௌரவத்துடன் வாழ வேண்டுமென நினைக்கும் அவர்களது எண்ணங்களை இனிமேலாவது புரிந்துகொண்டு இதுபோன்ற இனவாத கோஷங்களைப் புறந்தள்ளி இனங்களுக்குகிடையில் இணக்கத்தை ஏற்படுத்த பொது பலசேனா போன்ற அமைப்புகள் முன் வரவேண்டும்.
எதிர்காலத்தில் அனைத்து இன மக்களின் நலன்சார்ந்த அரசை உருவாக்க வேண்டுமேயன்றி தனித்த சிங்கள அரசை உருவாக்க வேண்டும் என எண்ணத் தலைப்படக் கூடாது. அப்படியான இன ஒற்றுமைமிக்க அரசு ஏற்பாட்டால் மட்டுமே உலக அரங்கில் இலங்கையின் சிறப்பு மிகைப்படும்.
இன்று உலக நாடுகளை நாம் எடுத்து நோக்குவோமாயின் அவற்றில் பல அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களது எண்ணங்களை வென்று சமத்துவத்துக்கு முன் உரிமையளித்து கூட்டிணைந்த செயற்பாட்டால் அபிவிருத்தி பாதையில் வெற்றி நடைபோட்டு வருவதை நாம் பார்க்கலாம்.
இந்த வகையில் இனி இந்த நாட்டில் மலரப்போகும் அரசும் அணைத்து இன மக்க ளையும் அரவணைத்து அவர்களது ஆட்சியில் உரிய பங்களிப்புகளை வழங்கி குறிப்பாக மூவின மக்களும் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment