இராணுவத் தளபதியின் பயணத் தடையை வரவேற்றமை விக்கியின் தேசத்துரோக செயல் - மங்களவே சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இராணுவத் தளபதியின் பயணத் தடையை வரவேற்றமை விக்கியின் தேசத்துரோக செயல் - மங்களவே சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம்

(எம்.மனோசித்ரா) 

நிரூபிக்கப்படாத யுத்தக் குற்றங்களைக் காரணம்காட்டி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை வரவேற்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளமை தேசத் துரோக கருத்தாகும். புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்கினேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

அத்தோடு பாராளுமன்றத்தினதும் அமைச்சரவையினதும் அனுமதி இன்றி நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவது தொடர்பிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 31\1 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தமையே தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாகும். 

ஜஸ்மின் சூக்காவின் ஏற்றுக் கொள்ளப்படாத அறிக்கையைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படாத குற்றங்களை காரணம் காட்டி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்கா மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுகின்றது. 

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment