சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரட்டியடிக்கப்படுவார்கள் - சுரேஸ் பிரேமசந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரட்டியடிக்கப்படுவார்கள் - சுரேஸ் பிரேமசந்திரன்

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் எதிர்கால பாராளுமன்றத்தேர்தலில் மக்களிடையே எவ்வாறாக இந்த தேர்தலில் முகம் கொடுப்பதற்கான சிந்தனை உள்ளது என்பதனை அறிந்து கொள்வதற்குமான இந்த விடயமாகத்தான் கிழக்கு மாகாண விஜயத்தை மேற்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூகம் அரசியல் பிரமுகர்களையும் இன்று சந்தித்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயம் மிக நீண்ட காலமாக ஒரு பிரச்சினை. கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. 

இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பி இருக்கின்றனர். குறிப்பாக வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். அதேசமயம் இந்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் எவ்வாறு இந்த தேர்தலை எதிர்கொள்வது தமிழ் மக்கள் எவ்வாறான விடயங்களை இங்கு எதிர்நோக்குகிறார்கள் என்ற பிரச்சினைகளும் பிரதானமாக நோக்கப்படுகின்றது. 

இங்குள்ள மக்கள் பல கிராமங்களை இழந்துள்ளார்கள் இழந்து கொண்டு வருகிறார்கள் மிக முக்கியமாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற படங்கள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்து தடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது. 

இவை அனைத்தும் இங்குள்ள சிவில் சமூகங்கள், பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். எங்களது புதிய தமிழ் மக்கள் கூட்டணிக்குள் கிழக்கு மாகாண மக்களது பிரச்சினைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதித்துவம்தான் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது. இதனை ஏனைய அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் பிரிந்தால் வரப்போகின்ற ஒரே ஒரு பிரதிநித்துவத்தை கூட இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனை அனைத்து தமிழ் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல். 

இங்கு இருக்கின்ற ஒரு தொகுதி அரசியல்வாதிகள் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை சிறந்த ஒரு விடயமல்ல. சாய்ந்தமருதுக்கு ஒரு நகர சபை கிடைத்திருப்பது நல்ல ஒரு விடயம் ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான ஒரு பிரதேச செயலகமாக தரம் உயர்த்திக் வழங்கப்படாமல் இருப்பது ஒரு வருந்தத்தக்க செயல். இதனால் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. ஆகவே இருக்கின்ற ஏனைய சமூகங்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

சாய்ந்தமருது நகர சபை வழங்கப்பட்டிருக்கிறது தமிழ் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஏனெனில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மூன்று தசாப்தகாலமாக அந்த மக்களின் போராட்டமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் எப்போது சந்தோஷப்படுவார்கள் என்றால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தினால் மாத்திரம். 

எங்கேயோ இருக்கும் ஒரு பிரதேசத்திற்கு நகர சபையோ அல்லது சேவையை வழங்குவதால் தமிழ் மக்கள் சந்தோஷப்படமாட்டார்கள். இந்த மக்களுக்கு ஏதும் இந்த அரசாங்கம் செய்ய விரும்பினால் இந்த பிரதேச செயலகத்தை தரமுயத்தி வழங்க வேண்டும். பிரதமர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அனைத்து தரப்புடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அதற்கும் முழுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. அம்பாறை மாவட்டத்தில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்காவிட்டால் அங்கிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்.

ஐ.நா. சபையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இலங்கையில் யுத்தம் நடைபெற்றதாக அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தனர். இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றுள்ளது என்று பல்வேறு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் பட்டியலிட்டு வழங்கியுள்ளனர். 

யார் யாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள என்பது ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்காது அதனால் ராணுவத் தளபதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் அமெரிக்க தூதரகத்தை அழைத்து தமது மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மைத் தன்மையுடன் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மைகளை வெளியில் கொண்டுவந்து தீர்வுகளை எட்டவேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை பேசத் தயாரில்லை ஏன் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கும் சஜித் பிரேமதாச கூட சவேந்திர சில்வா ஒரு சிறந்த வீரன் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார். ஆகவே அவர்கள் புகழாரம் சூட்டுவதற்கு இருக்கிறார்களே ஒழிய சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை. யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது.

சுமந்திரன் பேசுகின்ற அனைத்து விடயங்களும் பொய்யான விடயங்கள் அவர்கள் எப்போதும் உண்மை பேசியது கிடையாது. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு தடவை கால அவகாசம் அரசாங்கங்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தார். தேர்தல் நெருங்கும் வேலைகளில் இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைப்போம் தனது அறிக்கையை வெளியிடுகின்றார். 

நான்கு வருடங்களாக இந்த இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைக்க முடியாத சுமந்திரன் நாங்கள் கால அவகாசம் வழங்கவில்லை இலங்கை அரசை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னவர்கள் இன்று மொழியில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி மாயாஜாலம் செய்கின்றனர். இது தமிழ் மக்களிடமே உள்ள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு திருவிளையாடல் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி பிரமுகர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிவில், சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment