எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பேரூந்து தரிக்கும் உணவகங்கள் மற்றும் பழக்கடைகளில் விசேட பரிசோதனைகள் நேற்று 18.02.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பேரூந்து தரித்து உணவுகளை உண்ணும் உணவகங்கள் சுகாதாரமான முறையில் உணவு மற்றும் உணவகம் உள்ளமை தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.முகைதீன் தலைமையில் இடம்பெற்ற விசேட பரிசோதனையில் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.நசீர், ஏ.ஆர்.ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, சுகாதாரச்சீர்கேடான முறையில் உணவகங்களில் ஈக்கள் அதிகம் காணப்பட்டதுடன், உணவகம் அசுத்தமாகக் காணப்பட்டமை, பழைய பொருட்கள் பாவித்தமை, குளிர்சாதனப் பெட்டியில் உணவுகள் வைத்திருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றாமை, சமையலாளர்கள் மற்றும் வேலையாட்கள் சுகாதார உடைகளின்றிக் காணப்பட்டமை போன்ற பிரச்சனைகள் இனங்காணப்பட்டது.
இதில் சுகாதாரச்சீர்கேடான முறையில் காணப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மூன்று தினங்களில் மீண்டும் வருகை தந்து பரிசோதனைகள் மேற்கொள்ளும் உணவகங்கள் ஒழுங்கான முறையில் சுகாதாரத்துடன் இல்லாவிட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உணவகங்கள் ஒழுங்கான முறையில் சுகாதாரத்துடன் இல்லாத பட்சத்தில் உணவக உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி Dr. எம்.வி.எம்.முகைதீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment