(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஒத்துழைப்பினை வழங்குவார். ஜனாதிபதி தேர்தல் மேடையேறுவார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமலே அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கின்றோம். இந்நிலைமை பொதுத் தேர்தலுடன் மாற்றியமைக்கப்படும் என சக்தி வலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவத்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாமலே இடைக்கால அரசாங்கம் செயற்படுகின்றது. குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.
54 ஆயிரம் பட்டதாரிகளுக்கும், 1 இலட்சம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சி பதவி வகிக்கும் போது அரசாங்கத்தினால் பாரிய நெருக்கடிக்குள்ளானோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்கட்சியினது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஒரு அமைச்சின் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பும் போது அதற்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் உரிய பதில் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ஆளும் தரப்பினருக்கு குறிப்பிட்டுள்ளார். ஆகவே மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவத்தார்.
No comments:
Post a Comment