இணைத் தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரதமர் மஹிந்தவே எமது ஒரே தலைவர் : ஜி.எல்.பீறிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

இணைத் தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரதமர் மஹிந்தவே எமது ஒரே தலைவர் : ஜி.எல்.பீறிஸ்

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டணியில் இணைத் தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே எமது ஒரே தலைவர் என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ், மொட்டு சின்னத்தை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும் பயனற்றதாகும். ஆகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் சின்னம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தாது எனவும் தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய பங்காளி கட்சிகளையும் ஒன்றினைத்து 'ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி' என்ற புதிய பெயரிலே போட்டியிட்டது. அப்போது அமைக்கப்பட்ட கூட்டணி இன்றும் வழக்கத்தில் உள்ளது. 

பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு பயணிப்பதால் ஒரு சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றன. 

அமைக்கவுள்ள கூட்டணியில் இணைத் தலைமைத்துவத்தினை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டதாக சொல்லப்படும் செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

புதிய கூட்டணியில் இணை தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே புதிய கூட்டணியிலும் தலைவராக செயற்படுவார். 

மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை பொதுத் தேர்தலில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகின்றன. மொட்டு சின்னத்திற்கு பெரும்பாலான மக்களின் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றன. இதுவே எங்களின் பிரதான பலமாகும். 

ஆகவே இவ்விடயம் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதும், கவனம் செலுத்துவதும் பயனற்றதாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இதே நிலைப்பாட்டில் உள்ளார்கள் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment