(நா.தனுஜா)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஒட்டு மொத்த அரசியல் வாழ்விலும் புத்தபெருமானின் போதனைகளுள் மிக முக்கியமான விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்குத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனது அரசியல் செயற்பாடுகளைத் தொடங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கட்சி மீதான விசுவாசத்தை இடைநடுவில் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கினார்.
சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து, ஐக்கிய தேசியக் கட்சியையும் அழிக்கும் விதமாக செயற்பட்ட அவர் தற்போது பொதுஜன பெரமுனவின் ஊடாக பொலனறுவையில் போட்டியிட்டுப் பாராளுமன்றம் செல்வதற்கு முயற்சிக்கின்றார்.
எனவே அவர் தனது ஒட்டு மொத்த அரசியல் வாழ்விலும் புத்தபெருமானின் போதனைகளுள் மிக முக்கியமான விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்குத் தவறிவிட்டார்.
அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டியவர் மைத்திரிபால சிறிசேனவே ஆவார்.
ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோவும், பூஜித் ஜயசுந்தரவும் நீதிமன்றத்தின் முன்நிலையிலோ அல்லது தெரிவுக்குழுவின் முன்நிலையிலோ எவ்வித அழுத்தங்களுமின்றி சுதந்திரமாக சாட்சியமளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment