(எம்.ஆர்.எம்.வஸீம்)
உலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் விலை தற்காலிகமானதாகும். எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2020 ஜனவரி மாதம் வரை உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் எரிபொருள் விலை தற்காலிகமாக குறைவடைந்தது. எனினும் தற்போது மீண்டும் அது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரமளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததற்கிணங்க கடந்த ஜனவரியில் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்று மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அரசாங்கம் அவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment