திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பின் போது சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீரோட்டு முனை கரடிபுவல் பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நேற்றிரவு (02) இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் இவரிடமிருந்து 3000 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 13 வருட காலமாக சிறையில் இருந்து வந்த நிலையில் வெளியில் வருகை தந்து ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரையும் உரிய போதைப் பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கைது செய்யப்பட்ட நபரை முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமான முறையில் திருகோணமலை உப்புவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த விடுதியை நடத்தி வந்த அதன் நடத்துனரான உவர்மலை வீதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் மற்றும் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரையும் நேற்றிரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment