மலையக மக்களால் ‘ஒப்பாரி கோச்சி’ என அழைக்கப்பட்ட நிலக்கரி புகையிரதம் நீண்ட நாட்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து தெமோதர வரை பயணித்தது.
12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 09 ஆம் திகதி கொழும்பில் இருந்து தெமோதர பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த புகையிரதம், நேற்றுமுன்தினம் (11) நானுஓயா ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இந்த நிலக்கரி புகையிரதம் ஹற்றன் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு புகையிரத்திற்கு தேவையான நீரினை பெற்றுகொண்டது. இதன்போது பெருமளவான மக்கள் திரண்டுவந்து புகையிரதத்தை கண்டு மகிழ்ந்தனர்.
தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் 1964 இல் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஐந்து இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் தமது சொந்தங்களை இங்கு தவிக்கவிட்டுவிட்டு, விழிநீர் பெருக்கெடுக்க இந்த நிலக்கரி புகையிரதம் மூலமே கரையோரப்பகுதிகளை சென்றடைந்தனர். அதன்பின்னர் கப்பல்களில் அனுப்பட்டனர்.
இதன் காரணமாகவே இப்புகையிரதம் ஒப்பாரி கோச்சி என அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment