போதைப் பொருளுக்கு எதிராக 50 ஆயிரம் கையெழுத்துப் பெறும் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

போதைப் பொருளுக்கு எதிராக 50 ஆயிரம் கையெழுத்துப் பெறும் போராட்டம்

போதைப் பொருளினால் ஏற்படும் அழிவினை தடுப்போம் இளம் தலைமுறையினை பாதுகாப்போம் என்னும் தலைப்பிலான போதைப் பொருளுக்கு எதிரான கையெழுத்துப் பெறும் போராட்டம் இன்று காலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. 

போதைப் பொருளினை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியை கோரும் வகையில் 50 ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் போராட்டத்தினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், தேசிய மீனவ பெண்கள் சமூகம், மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்பன இணைந்து மேற்கொண்டிருந்தன. 

எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியிடம் இந்த கையெழுத்துகளை கையளிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன், திட்ட இணைப்பாளர் லவீனா உட்பட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், தேசிய மீனவ பெண்கள் சமூக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 
இலங்கையின் 15 மாவட்டங்களில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவ்வாறு கையெழுத்துப் பெறும் மனுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் சர்வதேச மகளிர் தினத்தன்று கையளிக்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்தார். 

இருக்கும் சட்டத்தினை பயன்படுத்தி போதைப் பொருளால் ஏற்படும் அழிவுக்கு சிறந்த தீர்வினை வழங்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய சட்டத்தினை உருவாக்கி போதைப் பொருளில் இருந்து இந்த நாட்டினை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டு நிற்கின்றோம் என்றார். 

இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனையினால் இளம் சமூதாயம் அழிந்து செல்வதுடன் குடும்பங்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் அவற்றினை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment