பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கான வயதெல்லை 45 என்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். எனவே வயதுகளை எல்லைப் படுத்தாமல் 45 வயது எனபதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களும் குறையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
பட்டதாரிகள் வேலை வாய்ப்பு விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 7000 கருத்திட்ட உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டது. திடீரென அது நிறுத்தப்பட்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இன்னும் அது வழங்கப்படவில்லை. எத்தனையோ கனவுகளின் மத்தியில் இந்நியமனம் பெற்றவர்கள் இன்று தொழில் இல்லாமல் இருக்கின்றார்கள். எனவே நிறுத்தப்பட்டு இருக்கின்ற அந்தத் தொழில் வாய்ப்பு மீண்டும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது சாதாரண தரம் சித்தியடையாதவர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு என்று ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதுவும் நல்ல விடயம்தான் ஆனால் சாதரண தரம் உயர் தரம் சித்தியடைந்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம இருக்கின்றார்கள் அதனையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு தொடர்பில் 35 வயதெல்லை இடப்பட்டது. தற்போது அதனை 45 ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கான இந்த வேலை வாய்ப்பு சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பது கசப்பானதாகவே இருக்கும். பட்டதாரிகள் எத்தனையோ சிரமத்துக்கும் மத்தியில் பட்டம் பெற்றவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் இருப்பதென்பது அவர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துவனவாக இருக்கும்.
எனவே பட்டதாரிகளுக்கன வயதுகளை எல்லைப் படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment