இந்தோனேசியாவில் முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள ரப்பர் டயரை அகற்றுபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ளது பலு நகரம். மத்திய சுலவேசியின் தலைநகரான இது பலு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் கடந்த வாரம் காணப்பட்ட முதலையின் கழுத்தில் மோட்டார் சைக்கிளின் டயர் சிக்கியிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டின் அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. அந்த சமயத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த டயர் முதலையின் கழுத்தில் சிக்கியிருக்கலாம் என கண்டறியப்பட்டது.
இந்த செய்தி மத்திய சுலவேசி இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் கவனத்திற்கு வரவே, ஒரு சில ஊர்வன வல்லுநர்கள் மூலம் அந்த டயரை எடுக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பல நாட்களாக முதலையின் கழுத்தை சுற்றியிருக்கும் அந்த டயர் நாள்பட நாள்பட முதலையின் கழுத்தை இறுக்கி இறப்பை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த ராட்சத முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள ரப்பர் டயரை அகற்றுபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
‘முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை அகற்றுபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். ஊர்வன இன விலங்குகளை வேட்டையாடும் வீரர்களை அழைக்கவில்லை. வன விலங்கு மீட்பில் அனுபவம் உள்ளவர்களையும், அவற்றின் பாதுகாப்பில் வேட்கை உள்ளவர்களையே அழைக்கிறோம். முதலையை நெருங்கவோ அல்லது அதன் வாழ்விடத்தை தொந்தரவு செய்வதோ கூடாது என்று நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்’ என்று மத்திய சுலவேசி இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹஸ்முனி ஹஸ்மர் கூறினார்.
No comments:
Post a Comment