பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகல்களை அடுத்து விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.
குறித்த சந்தேகநபர்கள் பயணம் செய்த டொல்பின் ரக வேன், 7 கைத்தொலைபேசிகள், 5 கஜமுத்துக்கள் என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை மாவட்டம் கந்தளாய், கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
கைதான 7 சந்தேகநபர்களும் சான்று பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment