தரம் 01 வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தரம் 01 வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாகக் காணப்படுகின்றது.
இத்தீர்ப்பை மீளாய்வு செய்து, மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்துவதன் பொருட்டு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டுமென, கடந்த ஜனவரி 02ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
ஆரம்ப வகுப்புகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை நியமிக்கின்ற, 'செளபாக்கியத்தின் நோக்கு' தேசிய கொள்கைக்கு அமைய, ஆரம்ப வகுப்புகளுக்கு பொறுப்பான ஆசிரியருக்கு இதுவரை இருந்த அழுத்தம் மற்றும் முகாமைத்துவ சிக்கல்கள் முடிவுக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவுக்கான பின்னணியின் அடிப்படையிலேயே, மாணவர்களின் எண்ணிக்கையை 35 முதல் 40 ஆக உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உரிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்பில் முகங்கொடுக்கும் மற்றுமொரு கஷ்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment