பொது சின்னத்திற்கு இணக்கம் தெரிவித்தால் உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு தயார் - ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்டால் பிரதமர் மகிந்த என்றும் எமக்கு தெரியும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

பொது சின்னத்திற்கு இணக்கம் தெரிவித்தால் உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு தயார் - ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்டால் பிரதமர் மகிந்த என்றும் எமக்கு தெரியும்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகளை ஓரிடத்திற்கு கொண்டுவரக்கூடிய பொது சின்னத்திற்கு இணக்கம் தெரிவித்தால் எந்தவொரு தருணத்திலும் தேர்தல் கூட்டணிக்கான உடன்படிக்கையை பொதுஜன பெரமுனவுடன் கைச்சாத்திடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஆதரவில்லாது எந்தவொரு கட்சியும் வெற்றி பெற முடியாது. பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தையை வெற்றி கொள்வதை இலக்காக கொண்டே தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், பொதுஜன பெரமுனவுடன் இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுகளை ஆரம்பத்தில் நடத்தியிருந்தோம். பின்னர் நேரடியாக முக்கிய தலைவர்கள் சந்தித்து இரண்டு சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளோம். 

ஜனாதிபதியையும் அவர்கள் சந்தித்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலான விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளன. கொள்கை ரீதியாக அவர்களுடன் பாரிய முரண்பாடுகள் எமக்கில்லை.

பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால் கட்டாயம் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவார். எமது மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் பொது சின்னத்துக்கு அவர்கள் இணங்கினால் எந்தவொரு தருணத்திலும் அவர்களுடன் கூட்டணி உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராகவுள்ளோம். 

அவர்கள் சாதகமான முடிவை எடுப்பார்களென நம்புகிறோம். வேறு தரப்புகளுக்கு ஆதரவளிக்க நாம் தயாரில்லை. அதன் காரணமாகவே தொடர்ந்து பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

கூட்டணியை அமைப்பதற்கு தேவை அனைத்து அர்ப்பணிப்புகளையும் நாம் செய்துள்ளோம். நாம் தனிப்பட்ட காரணிகள் எதனையும் கோரிக்கையாக முன்வைக்கவில்லை. 

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷதான் என்றும் எமக்கு தெரியும். நாட்டை வெற்றி கொள்ளும் ஒரு வேலைத்திட்டத்திற்காக நாட்டின் முற்போக்கும் மற்றும் இடதுசாரி சக்திகளை ஒரே இடத்திற்கு கொண்டுவரவே பொது சின்னத்தை வலியுறுத்துகிறோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment