சிறுபான்மை பொது வேட்பாளரை நியமிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் - நாற்பது ஆண்டு காலமாக அளித்த வாக்குகள் அனைத்தும் வீண்விரயம் என்பதே உண்மை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

சிறுபான்மை பொது வேட்பாளரை நியமிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் - நாற்பது ஆண்டு காலமாக அளித்த வாக்குகள் அனைத்தும் வீண்விரயம் என்பதே உண்மை

தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்கள், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிகளாலும், அரசாங்கங்களாலும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை நிரல்படுத்த வேண்டும் என்றும், அவற்றை நிறை வேற்றுவதற்கான ஆணையை சிறுபான்மை மக்களிடம் கேட்டுப் பெறுகிற சந்தர்ப்பமாக இத் தேர்தலை தலைவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த நாற்பது ஆண்டு காலமாக நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் பேசும் மக்கள் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் அளித்த வாக்குகள் அனைத்தும் வீண்விரயமாக்கப்பட்ட வாக்குகள் என்பதே உண்மையாகும்.

எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கவில்லை என்பதை பாடமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய அணுகுமுறையைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெருமளவான வாக்குகளை மக்கள் தருவார்களாக இருந்தால் இவ்வாணையை பெரும்பான்மை சிங்கள மக்களிடமும், சர்வதேசத்திடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும், அயல் நாடுகளிடமும் முன்வைத்து நியாயம் கோருவதற்கான புதிய அரசியல் நகர்வுகளைச் செய்ய முடியும்.

பெரிய கட்சிகள், தேர்தல் காலங்களில் சிறுபான்மைக் கட்சிகளையும் மக்களையும் இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சிக் குசலம் விசாரித்துவிட்டு தூக்கி வீசுகிற அரசியலை இல்லாதொழிக்க வேண்டும். இத்துணிவை வெளிக்காட்டுவதற்கு தமிழ்பேசும் பொது வேட்பாளரை நிறுத்துவதே இன்றிருக்கும் ஒரே வழியாகும்.

அதிகாரத்தை துறந்து புத்தர் காட்டிய ஆன்மீக ரீதியான வாழ்வியல் கல்விக்கு புறம்பாக வன்முறையை கையில் எடுத்துள்ள காவிகள் நாடெங்கும் காவித் திரிகிற அரசியலுக்கு சிறுபான்மையினர் அடிபணிய முடியாது.

இறுதித் தருணத்திலாவது தமிழ்பேசும் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அழுத்தத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்களும் மக்களும் தமது தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment