புதிய கூட்டணியை அமைப்பது மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நாளை வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையில் நடைபெறவுள்ளது.
மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் கூட்டணி தொடர்பில் நாடு திரும்பியதும் இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கும், கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கும் உறுதியளித்துச் சென்றார்.
பிரதமர் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே நாளை பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பதற்கான யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
நாளையதினம் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய கூட்டணியான ‘ஜனநாயக தேசிய முன்னணி’ அமைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இதேவேளை, பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐ.தே.கவின் வருடாந்த தேசிய மாநாடு நாளை நடைபெறவிருந்த நிலையில், கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக குறித்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment