எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவில்லை - மஸ்கெலிய பிரதேச சபை தலைவி செண்பகவள்ளி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவில்லை - மஸ்கெலிய பிரதேச சபை தலைவி செண்பகவள்ளி

எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை முற்றிலும் பொய்யான கருத்து என மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவி செண்பகவள்ளி தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஏனையப் பிரதேச சபைகளுடன் ஒப்பிடுகையில் மஸ்கெலியா பிரதேச சபையின் செயற்பாடுகள் சீராக இல்லையெனவும் பிரதேச சபையின் தலைவர் சபையை சரியாக வழிநடத்தி செல்வதில்லை எனவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தமை கவலையளிக்கின்றது. 

எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவதற்கு யாருக்கும் முடியாது. நான் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றேன். மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். இதனை மஸ்கெலியா பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள்.

நான் மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவராக பொறுப்பேற்ற பின்னரே பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றேன். நான் சபை தலைவராக பொறுப்பேற்கும்போது சபையில் எந்த ஒரு நிதியும் இருக்கவில்லை. மஸ்கெலியா பிரதேச சபையில் இன்று காணப்படும் வாகனங்கள், தளபாடங்கள், தேவையான உபகரணங்கள் போன்றன என்னால் பெற்றுக் கொடுக்கப்பட்டவையே ஆகும்.

தூய்மையான நகரமும் பசுமையான நகரமும் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மஸ்கெலியா நகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். பிரதேச சபைகளில் முதன் முறையாக தோட்ட பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு வீதி விளக்குகள் பொருத்தியுள்ளேன். 

எனது சபையின் 16 உறுப்பினர்களின் தொகுதிகளில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளேன். ஒரு பெண்ணால் எதனையும் செய்து காட்ட முடியும் என்ற கொள்கையில் நின்று மக்களுக்காக சேவையாற்றி வருகின்றேன். இன்று மஸ்கெலியா நகரம் மிகவும் அழகாகவும் செழிப்பாகவும் காட்சியளிக்கின்றது.

நான் முன்னெடுக்கும் சில வேலைத்திட்டங்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வரலாம். அதற்கு நான் அஞ்சபோவதுமில்லை பயந்து ஓடிப் ஒழிய போவதுமில்லை. கடந்த மாதம் மஸ்கெலியா நகரில் ஆட்டோ தரிப்பிடத்தில் பிரதேச சபைக்கான பதாகை ஒன்றிணை காட்சிப்படுத்த வைத்தேன். அதனை சில விஷமிகள் சேதப்படுத்தி விட்டார்கள். இதனால் ஆட்டோ தரிப்பிடத்திற்கான அனுமதியை அவ்விடத்தில் இரத்து செய்தேன். 

அதன்பின்னர் ஆட்டோ சாரதிகள் என்னிடம் வந்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் சேதப்படுத்தப்பட்ட பதாகைக்கு பதிலாக அதேபோன்று ஒன்றை அவர்களின் செலவில் அவ்விடத்தில் வைப்பதாக உறுதியளித்ததையடுத்து ஆட்டோ தரிப்பிடத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கினேன். இதை தவிர பாரிய பிரச்சினைகள் ஏதும் அங்கு இடம்பெறவில்லை. மேலும் கடந்த வாரம் மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் நடைப்பெற்றது.

இதன்போது எனக்கெதிராக எந்த உறுப்பினரும் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எனக்கும் எனது சபை உறுப்பினர்களுடனும் மிகவும் சுமூகமான உறவே காணப்படுகின்றது. எனவே இவ்வாறான பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தலவாக்கலை குறூப் நிருபர்

No comments:

Post a Comment