யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்து நீதி விசாரணைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அது இன்னமும் இடம்பெறவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐநாவிற்கான இயக்குநர் லூயில் சர்பொனேயு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை படையினரை ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிராக ஐ.நா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதே இதற்கு காரணம்.
இலங்கையின் 26 வருட ஈவிரக்கமற்ற யுத்தத்தின் இறுதியில் சவேந்திர சில்வா தலைமை வகித்த படையணியொன்று கைது செய்யப்பட்டவர்களை சுட்டுக்கொன்றதுடன் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது என ஐ.நாவின் விசாரணைக்குகுழுவொன்று 2015 இல் கண்டுபிடித்திருந்தது.
யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்து நீதி விசாரணைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அது இன்னமும் இடம்பெறவில்லை.
2012 இல் ஐக்கிய நாடுகளிற்கான பிரதித் தூதுவராக பணியாற்றிய வேளை சவேந்திர சில்வா அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதிப்படை நடவடிக்கைகள் குறித்த ஐ.நாவின் விசேட குழுவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
1980களில் இலங்கையின் தென்பகுதியில் ஜேவிபியினருக்கு எதிரான நடவடிக்கைகளின் போதும் சவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதி தருணங்களில் 40000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொடுரம் காரணமாக ஐ.நாவின் நடவடிக்கைகளில் மனித உரிமைக்கு முக்கியம் என்ற கொள்கையை ஐ.நா பின்பற்ற தொடங்கியது.
இந்த நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களில் அலட்சியப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இது அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினருக்கும் நாடுகளிற்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் கொள்கையை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடு ஐநாவின் புதிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என எதிர்பார்ப்போம்.
அமைதிப்படை நடவடிக்கைகளில் தங்கள் படையினரை ஈடுபடுத்தும் நாடுகளிற்கு தங்கள் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என விசாரணை செய்து ஆராயும் கடப்பாடு உள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் லெபனானில் பணி புரிய அனுப்பப்பட்ட இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பது தெரியவந்தது.
2017 இல் ஹெய்ட்டியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை படையினர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக திருப்பி அனுப்பபட்டனர், விசாரணைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இன்னமும் அது இடம்பெறவில்லை.
சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கை இராணுவம் பாரிய துஸ்பிரயோகங்களை இழைத்தவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை ஸ்தாபனமயப்படுத்தியுள்ள ஒன்று என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குற்றரசினதும் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளிற்கான ஸ்தாபனத்தினதும் நடவடிக்கை யுத்தகுற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளை ஐ.நா அலட்சியம் செய்யாது என்ற செய்தியை தெரிவித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment