ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எதுவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பிள்ளையார் வீதி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03) இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜனப் பெரமுன கட்சியிலிருந்து கோதபாய ராஜபக்ஸவின் பெயர் முன்மொழியப்பட்டிருக்கின்ற நிலையிலும் அவருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை இன்னும் நீக்கப்படவில்லை என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
அவர் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் சிரந்தி ராஜபக்ச தேர்தலில் முன்நிறுத்தப்படுவார் என்ற கருத்தும் நிலவுகின்றது. கோதபாய ராஜபக்சவின் கடந்த கால தடையங்கள் தமிழ் மக்களுக்கு கசப்பான உணர்வை ஏற்படுத்துகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக இன்னும் எவரும் முன்மொழியப்படவிலலை, அதிலும் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய ஆகியோரின் பெயர்கள் வெளிவருகின்றன. அவர்கள் தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அந்த தீர்மானத்தின் பின்னர் மிக முக்கியமாக இனப்பிரச்சினை தொடர்பில் தெளிவான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவர்கள் சொல்ல வேண்டும்.
இனப்பிரச்சினை தீர்ப்பது தொடர்பில் இலங்கை தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜையாக்கப்படாமல் ஏனைய மக்களுகளைப் போன்று சம உரிமையுடனும், சம அந்தஸ்த்துடனும், வாழ்வதற்குரிய வழிவகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
சஜித் பிரேமதாஸவைப் பற்றி சிங்களவர், தழிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் அனேகமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய இனப்பிரச்சினையை ஒரு தீர்க்கமான முறையிலும். ஒரு நிலையான தீர்வுக்குரிய எண்ணத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என அவர் சொல்லியிருக்கின்றார். 13 வது திருத்தம்கூட ஒரு முழுமையான திருத்தமாக அமையவில்லை.
ஜே.வி.பி அனுர குமார திசாநாயக்கவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ஒரு முற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்தி வருகின்றார். இன, மத பேதமின்றிச் செயற்படுபவதாகக் காணப்படுகின்றார்.
கடந்த காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகும் வாக்களித்து, சலித்துப்போயிருக்கின்ற நிலையில் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு ஆதரவு வழங்கினால் என்ன என்ற சிந்தனையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.
(பெரியபோரதீவு நிருபர்)
No comments:
Post a Comment