இலங்கை அரசாங்கம் தேவையான வசதிகளை வழங்கினால் இலங்கையில் நேரடியாக ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை நடைமுறைப்படுத்த தாம் தயார் என உலக பிரசித்தி பெற்ற ஈரல் மாற்று சிகிச்சை மருத்துவ நிபுணர் பேராசிரியர் மொஹமட் ரெலா தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தமது மருத்துவக் குழுவுக்கு அழைப்பு விடுத்தால் இலங்கையிலுள்ள மருத்துவர்களுடன் இணைந்து நேரடியாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமான செயற்திட்டமாக முன்னெடுக்க முடியும் என்றும் டொக்டர் மொஹமட் ரெலா தெரிவித்துள்ளார்.
கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற ஈரல் நோய் சம்பந்தமான விசேட மருத்துவர்களின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டிருந்தபோதே டொக்டர் ரெலா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சென்னையிலுள்ள 'டொக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிகல் சென்றர்' மருத்துவ நிலையம் மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த போதே டொக்டர் பேராசிரியர் மொஹமட் ரெலா மேற்கண்டவாறு கூறினார்.
பேராசிரியர் மொஹமட் ரெலா பிரிட்டனில் கிங்ஸ் யுனிவர்சிட்டி, ஹொஸ்பிட்டல் கொலேஜ், ஈரல் பொருத்துதல் தொடர்பான மருத்துவ பீடத்தின் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
உலகில் சுகாதாரத் துறையில் மிகவும் பிரபலமானவரான அவர் பெருமளவிலான ஈரல் மாற்றும் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். 5000 ற்கும் மேற்பட்ட ஈரல் மாற்றும் சத்திர சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment