ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டுமெனில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம் என ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாவிடின் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாதென ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டுமெனில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு அவர் பதவி விலகாதவிடத்து, ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்பதை எவராலும் மறுக்க முடியாது என ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தற்போது நாட்டு மக்களில் 10 பேர் இல்லை 100 பேரிடம் கேட்டாலும், நான் நினைக்கின்றேன் 99 பேர் ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் என கூறுவார்கள் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளரினால் வௌியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது ஒரு மோசடியான அறிக்கை என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
No comments:
Post a Comment