உங்களிடம் ஒரு பொருள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை எனக்கு தருவதென்றால் நான் என்ன தரவேண்டும் என்பதுதான் பேரம் பேசுதல். உங்களிடம் எனக்கு தர எதுவும் இல்லாத நிலையில் என்னிடம் பேரம் பேசுவது என்ற பேச்சே இல்லை என முஸ்லிம் உலமா கட்சி தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில், எமது கட்சிக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு வாக்குகள் இருந்தால் அதனை காட்டி முஸ்லிம் சமூக பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தால் நாம் வாக்குகளை தருவோம் என பேரம் பேச முடியும்.
முஸ்லிம்கள் பெரும்பாலும் எம்முடன் இல்லையே. அதனால் நாம் பெரும் கட்சிகளுடன் பேரம் பேச முடியாது. கோரிக்கை மட்டும் முன் வைக்க முடியும். அதனை உலமா கட்சி செய்துள்ளது. எமது கோரிக்கைகளை பொதுஜன பெரமுன ஏற்று ஒப்பந்தமும் செய்துள்ளது.
முஸ்லிம்கள் பொதுஜன பெரமுன முன்னணிக்கு அதிகம் வாக்களித்தால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என உரிமையுடன் கேட்கலாம். இதுதான் யதார்த்தம்.
உலமா கட்சி என்ற பெயரால் எதையும் அரசியலில் சாதிக்க முடியாது. சிறியதொரு கருத்தியல் தாக்கத்தை மட்டும் செலுத்த முடியும்.
உலமா கட்சியிடம் மக்கள் வாக்கு இல்லாவிட்டாலும் நேர்மை, வாக்குச்சுத்தம் மற்றும் அரசியலை துணிந்து மக்களுக்கு சொல்லி விழிப்பூட்டும் ஆற்றலும் உள்ள கட்சி என்பதால் உலமா கட்சியை சிங்கள பெரும் கட்சிகள் மதிக்கின்றன.
எமது கருத்துக்களுக்கு வரும் எதிர்க்கருத்துக்களும் ஏச்சுக்களும் சமூகத்தில் உலமா கட்சியின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன என்பதை தெரிந்து எம்மை மதிக்கிறார்கள்.
ஆனாலும் கட்சிகளுக்கு அவசிய தேவை ஓட்டுகள்தான். ஓட்டுகள் இருந்தால்த்தவிர பேரம் பேசுதல் என்பது இல்லை. அதனை விடுத்து எமக்கான கௌரவம் அவர்களிடம் உண்டு. அதை மட்டுமே நாம் பெற முடியும்.
ஆகவே நீங்களெல்லாம் ஓட்டுப்போட்டு ஏமாந்த கட்சிகள் உங்கள் வாக்குகளை வைத்து சமூகத்துக்காவது ஏதாவது பேரம் பேசியதா என்று பாருங்கள். உங்களை வைத்து மது மாது, கோடிக்கணக்கில் பணமும், பதவியுமே இன்று வரை பேசம் பேசப்பட்டன என்பதை நீங்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் உலக மகா முட்டாள் என முஸ்லிம் உலமா கட்சி தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அப்துல் மஜீட் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment