(எம்.மனோசித்ரா)
தேசிய ஊடகக் கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுமே தவிர, முடக்கப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய ஊடகக் கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். மாறாக எமது அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் ஊடகத்துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியையே நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.
இது தொடர்பில் ஊடகத்துறையினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த கலந்துரையாடல்களின்போது தேசிய ஊடகக் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த கொள்கை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இது தேசிய ஊடகக் கொள்கை மாத்திரமே. மாறாக சட்டம் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன்மூலம் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுமே தவிர, முடக்கப்படமாட்டாது. ஊடகங்கள் விரும்பினால் மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment