ஊழல் செய்ததாக விசாரணைக்குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்து தன்னருகில் கொண்டு திரிகிறார்.
இதனால் அவருடைய ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டிருந்தார். பல விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக இருந்தேன்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை கொண்டு வந்திருந்தார்.
அதன் மறுநாள் முழங்காவில் பகுதியில் எனது அமைச்சின் வேலைத்திட்டம் ஒன்றிக்கான பிரதம விருந்தினராக முதலமைச்சர் கலந்து கொண்டார்.
அன்று ஐங்கரநேசன் மீதான நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாது அவரை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.
அமைச்சர் ஐங்கரநேசன் மீது வீண் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எனத் தெரிவித்திருந்தார்.
ஒரு நீதியரசராக இருந்தவர். வட மாகாணத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பில் இருந்தவர். வட மாகாண அமைச்சர்களை வழி நடத்தியவர். தனது குழாமில் உள்ள ஒரு அமைச்சருக்கு எதிராக அதே ஆளுக்கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்த போது அதனை விசாரணை செய்யாது, அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது எவ்வாறு ”பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சாது” என கூற முடியும்.
ஐங்கரநேசன் மீது குற்றச்சாட்டு வந்ததில் இருந்தே அவரை பாதுகாக்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் முயன்றார். ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதலமைச்சர் ஒரு விசாரணை குழுவை நியமித்தார்.
அதன்போது எனக்கு எதிராகவும், சத்தியலிங்கத்திற்கு எதிராகவும் அப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் எனக்கு எதிராக எவ்வாறு விசாரணை குழுவை அமைக்க முடியும்.
குற்றச்சாட்டு வந்த பின்தான் விசாரணை குழு அமைக்கப்படுவது வழமை. மத்திய அரசிலும் அதுதான் நடைமுறை. ஆனால் முதலமைச்சர் இங்கு ஏன் அவ்வாறு நடந்து கொண்டார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதிதான் என்மீது முதன்முதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதுவும் விசாரணை குழு அமைத்த பின்னர் அக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. வெலி ஒயாப் பகுதியில் இருக்கின்ற சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி செய்தேன் என்றும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைளின் போது பஸ் தரிப்பிடம் அமைக்கும் போது மோசடி இடம்பெற்றது எனவும், மாவீரர் போரளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டையும் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்திருந்தார். மாவீரர் போராளிகள் குடும்பங்களுக்கும், ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு ரூபாய் என்றாலும் நான் எடுத்தேன் என்று நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுக்குகிறேன்.
பிழை செய்த ஒருவருக்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? அவருக்கு எடுத்த நடவடிக்கை என்ன என்றால் அமைச்சு பொறுப்பு கொடுத்தமை. இந்த விடயத்தில் நீதி, நியாயமாக முதலமைச்சர் நடந்தாரா எனக் கேட்டால் சிறு துளி கூட அவ்வாறு நடக்கவில்லை என சிறு பிள்ளை கூட சொல்லும்.
ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டை சொல்லிவிட்டு விசாரணை குழுவில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மாறாக அமைச்சு பதவி கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
இந்த ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் சம்மந்தம் இருக்கிறதா? ஊழலற்ற மாகாண சபையை உருவாக்கியதாக மார்தட்டி சொன்ன முதலமைச்சர் ஏன் ஒரு ஊழல் செய்த அமைச்சரை தன்னருகில் வைத்திருக்கின்றார். அவர் நியமித்த விசாரணை குழு ஊழல் செய்ததாக தெரிவித்தது. அதனடிப்படையிலேயே அவரே பதவி விலக்கினார்.
இன்று அவரை தனக்கு அருகாமையில் இரவு பகலாக கொண்டு திரிகிறார். ஆகவே தொடக்கம் முதல் இன்று வரை முதலமைச்சர் பிழையாக நகர்கிறார். முதலமைச்சர் நீதி அரசராக இருந்து நீதி தவறியிருக்கிறார்.
அவர் செய்தது பிழையான விடயம் என்பது இன்று நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இதற்கு எதிராக மேன்முறையீடு செல்ல வேண்டும். நான் அதற்கு எதிராகவும் போராடி எனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்து அங்கும் முதலமைச்சர் பிழையாக நடந்திருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தி வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment