திருகோணமலை, கோணேஸ்வர ஆலயத்தில் கடமையாற்றி வந்த விஷ்வகேஸ்வர ஐயரினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (05) அவரது மகனிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை கோணேஸ்வர கோயிலில் ஐய்யராக கடமையாற்றிய விஷ்வகேஸ்வர ஐயருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த ஐயர் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மேன்முறையீடு செய்தபோதும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் வழங்கிய தீர்ப்பு சரி என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த ஐயரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரது மனைவியின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்துச் செல்கிறீர்களா எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, அவரது மகனாகிய விஷ்வகேஸர் வெங்கடேஸ்வரர் சர்மாவிடம் அதனை ஒப்படைக்குமாறு அவர் கூறியதையடுத்து, இன்று (05) திருகோணமலை நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து அவரது மனைவியின் எலும்புக்கூடு மற்றும் சில சான்றுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதில் புகைப்பட அல்பங்கள், நாளேடு மற்றும் பிராமணர் நூல், தாலிக்கொடி மற்றும் பழைய புடவை கொண்ட பெட்டி என்பன அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறித்த எலும்புக்கூட்டை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்தின் காவடி தெற்கு கொக்குவில் பிரதேசத்திலுள்ள காவடி தெற்கு இந்து மயானத்தில் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment