முதல் முறை வீடியோ தொடர்பாடல் மூலம் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை - குற்றவாளிக்கு 30 வருட சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

முதல் முறை வீடியோ தொடர்பாடல் மூலம் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை - குற்றவாளிக்கு 30 வருட சிறைத் தண்டனை

இரு பெண் சுற்றுலா பயணிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை தொடர்பாக வீடியோ தொடர்பாடல் (Video conferencing) மூலம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள கண்டி உயர் நீதிமன்றத்திற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக இடம்பெறும் இவ்விடயம், கடந்த வாரம், வழங்கப்பட்ட இவ்வனுமதி இலங்கையின் சட்டத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

கடந்த 2016 ஏப்ரல் 14ஆம் திகதி, கண்டியில் வைத்து இரண்டு பிரித்தானிய பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானமை தொடர்பில் (வழக்கு B/38162)) நீதிமன்றத்தில் இடபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கு இரு சிறுமிகளினது குடும்ப உறுப்பினர்களும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கமைய, சந்தேகநபருக்கு (285/2017 வழக்கு) கண்டி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரும் லண்டனிலிருந்து கண்டி உயர் நீதிமன்றத்திற்கு ஜூலை 23,24,25 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் வழக்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இவ்வழக்கு விசாரணைகளை வீடியோ தொடர்பாடல் மூலம் மேற்கொள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியது. 

சந்தேகநபர் மீது 6 குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில்,பாதிக்கப்பட்ட 2ஆவது நபரிடமிருந்து ஸ்கைப் வீடியோ அழைப்பு மூலம் சாட்சியங்கள் பெறப்பட்டன. அவரது சாட்சியங்கள் முழுமையாக பெறப்பட்டதன் பின்னர் சந்தேகநபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அதற்கமைய, சந்தேகநபருக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க உத்தரவிட்டார். 

மேலும் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் முடிக்க உத்தரவிட்டார். 

மேலும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தலா ரூ. 3,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இலங்கை பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ரூ. 25,000 செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவ்விசாரணைக்கு அவசியமான அனைத்து இராஜதந்திர தகவல் தொடர்புகளும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சட்ட பிரிவின் குற்றப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா மற்றும் சுற்றுலா பொலிஸ் பிரிவின், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பிரபாத் விதானகமகே. இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் லண்டனில் உள்ள பொதுநலவாய அலுவலகம், இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் வெளியுறவு அமைச்சு இலங்கை சுற்றுலா பொலிஸ் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த முழு செயன்முறையையும் கண்டி பொலிசார் மேற்கொள்வதற்கு உதவியளித்தன. 

இலங்கையின் சுற்றுலாத்துறையை கையாளும் நிறுவனம் எனும் வகையில் கண்டி பொலிசாருக்கும், இவ்வழக்கை சிறப்பாக கையாண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக பெண் பயணிகளுக்கு, இலங்கையை ஒரு பாதுகாப்பான நாடாக அமைப்பது தொடர்பில் இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment