ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் இன்று (4ஆம் திகதி) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள தெரிவுக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் செயற்படுகின்றது.
ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, டொக்டர் ராஜித்த சேனாரத்ன, ஆஷூ மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன, M.A. சுமந்திரன் மற்றும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியவர்கள் தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
கடந்த 29ஆம் திகதி கூடிய இந்த தெரிவுக்குழு விசாரணைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் அன்றைய தினம் சாட்சி வழங்கியிருந்தனர்.
இதனிடையே, இன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
No comments:
Post a Comment