இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இரண்டு நாடுகளிலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களைத் தடுத்து வைக்கக்கூடாதென்ற முன்மொழிவை இந்தியப் பிரதமர் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 30ஆம் திகதி புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கியிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் உட்பட பல முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிநேகபூர்வமாகவும், ஆக்கபூர்வமானதாகவும் நடைபெற்றது.
இந்தப் பேச்சுக்களில், இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலாளர் விஜய் கோக்ஹலே, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, இந்திய வெளிவிவகார அமைச்சின், இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கான மேலதிக செயலாளர் தினேஸ் பட்நாயக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குழுநிலைப் பேச்சுக்களுக்குப் பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களும் தனித் தனியாக பேச்சுக்களிலும் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுக்களின் போது இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி பேசினார்.
அப்போது இரண்டு நாடுகளும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களைத் தடுத்து வைக்கக்கூடாது என்ற முன்மொழிவை இந்தியப் பிரதமர் முன்வைத்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment