இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியமளிக்க தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘போலியான ஊடகக் கண்காட்சிகளை நடத்தாது உண்மையான முறையில், சாட்சி விசாரணைகளை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முக்கிய விடயங்களை அம்பலப்படுத்த தயார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியம் வழங்க முடியும்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சாட்சி விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நாடகம். இந்த சாட்சி விசாரணைகளால் புலனாய்வுப் பிரிவினர் மேலும் பலவீனமடைவர்.
இந்தப் பிரச்சினையை மெய்யாகவே தீர்க்க விரும்பும் தரப்பிடம் என்னிடம் உள்ள தகவல்களை வழங்கத் தயார்.
புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைத்து ஊடகங்களின் முன்னிலையில் விசாரணை செய்வது இளம் தம்பதியினர் முச்சந்தியில் வெட்ட வெளியில் தேனிலவை அனுபவிப்பதற்கு நிகரானது’ எனவும் அவர் இதன்போது விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment