நவீன தொழிநுட்பத்தின் அனுகூலங்களை அறிவில் சிறந்த கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட உலகினை உருவாக்குவதற்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
நவீன தொழிநுட்பம் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவேயன்றி அதனை மனித சமுதாயத்தின் அழிவுக்காக பயன்படுத்தக்கூடாது என்று இன்று (12) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனங்கள் இணைந்து 2,500 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி இன்று மக்களிடம் கையளித்தார்.
இதன்போது பொலன்னறுவை நகரை இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் நகரமாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார்.
பொலன்னறுவை தீப பூங்காவில் அமைக்கப்பட்ட 5G தொடர்பாடல் கோபுரம் மற்றும் ஹபரன பொலன்னறுவை வீதியில் தற்போதுள்ள தொடர்பாடல் குறைபாடுகளை சரி செய்வதற்கான தொடர்பாடல் கோபுரத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மத்திய கலாசார நிதியத்தினூடாக பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டிட தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
18 கடைகளைக் கொண்ட இந்த வர்த்தக கட்டிடத் தொகுதியானது 44 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமன்கடுவ முன்னாள் அரசாங்க அதிபருக்கு சொந்தமான பழைமை வாய்ந்த உத்தியோகபூர்வ இல்லத்தை கலாசார சொத்தாக மத்திய கலாசார நிதியத்திற்கு பெற்றுக் கொண்டதன் பின்னர், அதனை அகற்ற முடியாத காரணத்தினால் அக்கட்டிடத்தின் கலாசார தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் மறுசீரமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிட தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டதுடன், கடை உரிமையாளர்களுக்கு கடைகளை கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கி வைத்தனர்.
அதன்பின்னர் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட பொலன்னறுவை ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அவ்வலுவலகத்தின் முதலாவது வாடிக்கையாளருக்கு இணைய வசதி ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், நவீனமயப்படுத்தப்பட்ட அழைப்பு நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து பொலன்னறுவை சந்திர மண்டபத்தில் இடம்பெற்ற விழாவின்போது மாகாணத்தில் அமைந்துள்ள 110 பாடசாலைகளுக்கு இலவசமாக இணையத்தள வசதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக 10 பாடசாலைகளுக்கு ஜனாதிபதி அன்பளிப்பு பத்திரங்களை வழங்கி வைத்தார்.
மொபிடெல் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள கிராமிய இணையத்தள வசதிகளின் கீழ் நவகினி தமன மகா வித்தியாலயத்தின் மாணவ, மாணவிகளை நேரலையில் தொடர்புகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி, இத்தகைய வசதிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது நவீன உலகத்தின் கதவுகளை திறந்து வைக்கும் நோக்கத்துடன் என்றும் நவீன தொழிநுட்பத்தின் நன்மைகளை மாத்திரம் பயன்படுத்தி உலகை வெற்றிகொள்ளக்கூடிய எதிர்கால சந்ததியினரை நாட்டில் உருவாக்குவதே நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, பொலன்னறுவை நகரபிதா சானக சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பணிப்பாளர் குழாமினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பொலன்னறுவை நூதனசாலையின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
No comments:
Post a Comment