கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, கிடைத்துள்ள முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை பெருந்தோட்ட சங்கத்திடமிருந்து குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அரச சட்ட திட்டங்களை மீறி மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பகுதியில் தனது மனைவி , மகள் மற்றும் உறவினருக்கு தலா 50, 20 மற்றும் 10 ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினூடாக புற்று நோய்க்கான மருந்துகளைக் கொள்வனவு செய்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பில்லியன் கணக்கான ஊழல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டு ஆவணங்களையும் விசாரணைக்காக சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த முறைப்பாடானது இலங்கை சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 07 முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை முறைப்பாடுகள் கையேற்கப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரையில் 295 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment