பதுளை மாவட்டம் ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் மர்ம மனிதர்கள் உலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு, பகல் வேளைகளில் உலவும் இம்மர்ம மனிதர்கள், மக்களைப் பயமுறுத்தி வருவதுடன் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் கடந்த மாதம் 23இல் ஆரம்பமான இம்மர்ம மனிதர்களின் அட்டசாசங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இவர்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்த தோட்ட இளைஞர்கள் இரவு வேளைகளில் காவல் காத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில், இம்மனிதர்களைக் கண்டு ஓடியதில் வீழ்ந்து காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து தோட்ட மக்கள், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸிடம் முறையிட்டனர். இராஜாங்க அமைச்சர் உடனடியாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு வேளைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பாதிக்கப்பட்ட மக்களை (03) நேரில் சென்று பார்வையிட்டு நிலமையை கேட்டு அறிந்து கொண்டார்.
முன்னைய காலங்களில் “கீரீஸ்மேன்”; என்று மர்ம மனிதர்கள் உலவியதால் நாட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் மீண்டும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
No comments:
Post a Comment