மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை தவறு என்றால் உடனடியாக பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட 5 நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை உட்பட 37 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன.
எனினும் குறித்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தனது தலையீடு இன்றியே இடம்பெற்றதென, அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை தனக்கு தெரியாது என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் இணை அனுசரனை வழங்க முடியாது எனக்கூறிய ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு ஒரு கருத்தையும் சர்வதேசத்திற்கு ஒரு கருத்தையும் கூறி ஏமாற்றும் ஜனாதிபதி, அரச பிரநிதிகளாக ஜெனீவாவிற்கு சென்றவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதிக்கு தைரியம் இருந்தால் அவர் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment