மாறிவரும் ஒவ்வொரு அரசாங்கங்களினதும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு வீதியே தஞ்சம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமும், கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிழக்கு மாகாணம் பூராகவும் பல்லாயிரக் கணக்கான கையெழுத்துகள் திரட்டப்படவுள்ளன.
கையெழுத்து திரட்டப்பட்ட மகஜர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அது மாத்திரமின்றி மலையக மக்கள் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த மகஜர் இந்திய தூதரகம் மற்றும் பிரித்தானிய தூதரகம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, புதிய வரவு செலவு திட்டத்தினூடாக மலையக மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment