திருகோணமலை, சம்பூரில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் காணியில் உள்வாங்கப்பட்டுள்ள தனியார் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படவுள்ளன.
திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்று (27) சூரிய ஒளி மின் நிலையம் (Solar power) அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்சக்தி, வலுசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது
திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் 500 ஏக்கர் காணி மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காணியில் சூரிய ஒளியில் மின்சார நிலையம் அமைக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் மின்சாரத்தை மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதே நோக்கம். தலை நகர் மாத்திரம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது எமது இலக்கல்ல.திருகோணமலை போன்ற மாவட்டமும் அபிவிருத்தி அடைய வேண்டும்.
மின்சாரத்தை சேமித்துச் சிக்கனமாக பாவித்துக் கையாளக்கூடிய வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும். குறைந்தளவிலான மின்சாரக் கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களது ஒத்துழைப்பும் எமக்குத் தேவை.
சம்பூரில் காணப்படும் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பாரிய மின்சக்தித் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.
சம்பூர் பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணியில் தனியாருக்கு சொந்தமான காணிகளும் உள்வாங்கப்படுவதாகவும், அதற்கு வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு பேசப்பட்டது.
இதன்போது மின்சக்தி இராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், மின்சார சபை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment