மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நிபுணர்குழுவின் அதிகாரப் பரவலாக்கத்தைக் கூட நாம் ஏற்கத் தயார் - யோகேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நிபுணர்குழுவின் அதிகாரப் பரவலாக்கத்தைக் கூட நாம் ஏற்கத் தயார் - யோகேஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்தபோது அவர் தெரிவித்த கருத்தின் படியும் அமைக்கப்பட்ட நிபுணர்குழு மற்றும் சர்வகட்சிக் குழுவும் தயாரித்த அறிக்கையில் முன்மொழிந்ததன் பிரகாரமும் அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கினால் கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பாடசாலை அதிபர் கி.சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் மற்றும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ். தட்சணாமூர்த்தி உள்ளிட்ட கல்வித்திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

யோகேஸ்வரன் எம்பி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த ஒக்டோபர் மாதம் ஒரு சூழ்ச்சியின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றினார். அந்த சட்ட விரோத ஆட்சியை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே உரியது. 

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் அமைச்சு பதவிகளை ஏற்கவில்லை என மக்கள் எங்களிடம் கேள்வியெழுப்புகிறார்கள். 

எனினும் தமிழினம் இழந்த உரிமையைப் பெற்று அதிகாரத்துடன் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் சுய நிர்ணய உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதற்காக எமது உறவுகள் பல தியாகங்களை செய்தார்கள். இத்தியாகம் கார்பட் வீதி அமைக்கவும் கட்டடங்களை நிருமாணிக்கவும் அபிவிருத்திகாகவும் அல்ல.

இதனால் அமைச்சுப்பதவிகளை எடுப்பதன் மூலமாக அந்த தியாகத்தை நாம் கொச்சைப்படுத்த முடியாது. 'நக்குண்டார் நாவிழந்தார்"; என்ற ஒப்பனைக்கமைவாக அமைச்சு பதவிகளைப் பெற்று அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளை அனுபவித்துக் கொண்டு நாங்கள் எமது மக்களின் அபிலாசைகளை விற்க முடியாது.
நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாவிட்டாலும் இந்த அரசாங்கத்திலிருந்து பெறக்கூடியவற்றைப் பெற்று எமது மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம்.

ஐக்கிய தேசிய அரசாங்கம் தற்போது தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தேசிய அரசாங்கம் அமைவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதனால் 'இது சமஷ்டியைக் குறிக்கிறது. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது" என மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் தீவிர பிரசாரம் செய்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது 'அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தீர்வு வழங்கப்படும் என பிரசாரம் செய்திருந்தார். அந்தவேளையில் அவர் உருவாக்கிய சர்வ கட்சிக்குழு அறிக்கையிலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால் அவரே இன்று மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது, அதிகாரங்கள் பரவலாக்கப்படக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் நாடு பிளவுபடுவதற்கு வழியமைக்கும் என மேடைகளில் பிரசாரம் செய்கின்றமை வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்தபோது தெரிவித்த கருத்தின் படியும் அமைக்கப்பட்ட நிபுணர்குழு, சர்வகட்சிக்குழு முன்மொழிந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன் படியும் அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கினால் கூட நாம் ஏற்கத்தயாராக இருக்கிறோம்.

மஹிந்த ராஜபக்ஷவும் அவது குழுவினரும் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளனர். ஆனால் பல மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஆளுநரின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. மக்கள் ஆணை பெற்ற குழுவிடம் ஆட்சி வழங்கப்படுவதற்காக முதலிலே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என்றார்.

நாசர் எம். கௌஸ்

No comments:

Post a Comment