பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (30) இரவு சுன்னாகம் பகுதியில் வைத்து 3 அடி நீளமுள்ள 7 வாள்களுடன் குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் கைதான சந்தேகநபர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20 இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த இம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் கொக்குவில் பகுதியை சேர்ந்த 24 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆவா குழுவின் தலைவர் எனப் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட மோகன் அசோக் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment